காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெல்லாம் தவிர்த்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலம்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே
என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
தந்துகலந் தெனைப் புணர்ந்த தனிப்பெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியேஎன் கண்மணியே வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும் அணிந்தருளே